பிரதமருக்கு தந்தி: அஞ்சல் நிலையத்தில் சிறப்பு கவுன்டர்கள் அமைப்பு
நெல்லை: இலங்கை ராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்பும் திமுகவினரின் வசதிக்காக பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு லட்சக்கணக்கான தந்தி அனுப்பும்படி முதல்வர் கருணாநிதி பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தார்.
கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தந்திகள் பிரதமருக்கு நேற்று அனுப்பப்பட்டன.
இந்நிலையில் பாளை தபால் நிலையத்தில் பிரதமருக்கு தந்தி அனுப்பும் பொருட்டு நேற்று சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டது. இந்த கவுண்டர் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதில் பொதுமக்கள் பிரதமருக்கு தந்தி அனுப்பலாம்.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மொத்தமாக தந்தி அனுப்ப நினைத்தால் பாளை தபால் நிலையத்தை தொடர்பு கொண்டால் தபால் அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று தந்தியை பெற்றுக் கொள்வார்கள் என்று முதுநிலை கண்கணிப்பாளர் ஜெயராஜன் தெரிவித்தார்.