இலங்கை விவகாரம்: தமிழகத்தில் 14ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிப்பதாக கூறிக் கொண்டு அப்பாவித் தமிழர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது இலங்கை ராணுவமும், விமானப்படையும்.
கிளிநொச்சியை ராணுவம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசித்து வரும் லட்சக்கணக்கான தமிழர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தினசரி விமான தாக்குதலும் நடந்து வருவதால் உயிரைக் கையில் பிடித்தபடி தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி வருகின்றனர்.
அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை ராணுவம் நிறுத்த வேண்டும் என்று கோரிய தமிழக கட்சிகள், இதுகுறித்து இலங்கை அரசுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கையை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் சார்பில் தந்தி அனுப்பும் போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை தமிழர் பிரச்சினையில், தமிழகத்தின் அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதன் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும், நிலையான அமைதி அங்கே உருவாகிட தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், அங்கே இனப்படுகொலையும், போரும் இல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன்ர வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் 14ம் மாலை 4.30 மணிக்கு தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி அழைப்பு அனுப்பியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications