சமாதானத்தை சீர்குலைப்போர் மீது நடவடிக்கை: விஜயகாந்த்
சென்னை: சமாதானத்தை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சர்ச் தாக்குதல் சம்பவங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் சமீப காலமாக தேவாலயங்கள் சேதப்படுத்தப்படுவதும், கிறிஸ்தவ மக்கள் தாக்கப்படுவதும் இதுவரையில் இல்லாத அதே நேரத்தில் கண்டிக்கத்தக்க செயலாகும். இவற்றை முளையிலே கிள்ளி எறிய வேண்டும். யார் குற்றம் செய்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினரும் நடுநிலையோடு இயங்க வேண்டியது அவசியம். அரசியல் தலையீடு காரணமாக காலம் தாழ்த்துவதோ அப்பாவி மக்கள் மீது வழக்குப் போடுவதோ கூடாது.
மாநிலத்தில் எந்தெந்த பகுதிகளில் வகுப்பு கலவரங்களுக்கான சாத்திய கூறுகள் உள்ளன என்பது கடந்த கால நிகழ்ச்சிகளில் இருந்து அரசுக்கு தெரியும். அத்தகைய இடங்களில் கோவில்கள், மசுதிகள், தேவாலயங்கள் என்று எதுவானாலும் அரசு முன் கூட்டியே பாதுகாப்பு அளித்திருந்தால் இத்தகைய சம்பவங்களை தடுத்திருக்க முடியும்.
மதம் என்பது அவரவர் நம்பிக்கைய பொறுத்தது. அனைவரும் சமாதானமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவது அரசின் கடமை. எல்லோரும் இந்தியர்கள் என்பது வெறும் முழக்கமாக இருக்கக் கூடாது.
அனைவரும் சட்டத்தின் முன் சமமாம நடத்தப்படவும், எந்த சாராரும் புறக்கணிக்கப்படவில்லை என்ற உணர்வு பெற சமவாய்ப்பு அளித்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டும் பன்மை சமுதாயமாக இயங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமாதானத்தை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.