முக்கிய தலிபான் தளம் அழிப்பு, 20 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வடமேற்கு எல்லையில் இருந்த தலிபான் தீவிரவாதிகளின் முக்கிய தளத்தை அழித்த்து பாகிஸ்தான் அதிரடிப் படை. இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அதிகாரம் செலுத்தி வந்த தலிபான்கள், அங்கிருந்து அமெரிக்கப் படைகளால் விரட்டப்பட்ட பிறகு, எல்லை நாடான பாகிஸ்தானில் புகுந்து கொண்டு, அவ்வப்போது தீவிரவாதச் செயல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
குறிப்பாக வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள பியோசார், ஷவார் மற்றும் லண்டாய்சார் போன்ற பகுதிகள் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்துதான் தங்கள் மொத்த நெட்வொர்க்கையும் தலிபான்கள் இயக்குவதாகக் கூறப்படுகிறது.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடந்த தாக்குதலில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுகளை வீசி இந்த தாக்குதலை பாகிஸ்தான் அதிரடிப் படை நடத்தியது.
இந்த தாக்குதலையும், தங்கள் தரப்பு உயிரிழப்புகளையும் ஒப்புக் கொண்டுள்ளது தலிபான் அமைப்பு.
இது தொடர்பாக அதிபர் சர்தாரி கூறுகையில், இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றும், பாகிஸ்தானை தீவிரவாதமில்லாத நாடக மாற்றுவதே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தலிபான்களாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
தீவிரவாதத்தை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து நேற்றுதான் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடந்தது. இதன் எதிரொலியாகவே, தலிபான்களுக்கு எதிரான இந்த அதிரடித் தாக்குதலை தொடங்கியுள்ளது ராணுவம்.