ஏஐஜிக்கு 122.8 பில்லியன் டாலர் நிதி; கண்காணிக்க தனி குழு
வாஷிங்டன்: பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏஐஜி காப்பீட்டு நிறுவனம் அமெரிக்க நிதித் துறையிடமிருந்து 70.3 பில்லியன் டாலர் கடனாகப் பெற்றுள்ளது.
இவ்வளவு பெரிய தொகையை அந்த நிதி நிறுவனம் எப்படி பயன்படுத்தப் போகிறது என்பதை கவனிக்க அமெரிக்க அரசு தனி குழுவையே நியமித்துள்ளது. .
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு சுமார் 700 பில்லியன் டாலர் நிதியைக் கடனாகக் கொடுத்து உதவியுள்ளது. கடும் எதிர்ப்புக்கிடையே சமீபத்தில்தான் அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தன.
இந்தத் தொகையில் ஏஐஜிக்கு 85 பில்லியன் டாலர் அளவு ஒதுக்குவதாக முதலில் அறிவித்தது அமெரிக்க அரசு. பின்னர் இதை 122.8 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது.
இதில் முதல்கட்டமாக 70.3 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது அமெரிக்க ரிசர்வ் வங்கி. இந்தத் தொகையை அந்த நிறுவனம் எப்ப்டியெல்லாம் பயன்படுத்தப் போகிறது என்பதைக் கண்காணிக்க தனி குழுவையே நியமித்துள்ளது அரசு.
ஏஐஜி நிறுவனம் உண்மையில் கொடுத்துள்ள தொகை, அதன் பின்னணி, இதில் தேவையற்ற முதலீடுகளின் அளவு என பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரிக்கவும் அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.