அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அதிமுக வர வேண்டும்: திருமா.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வர் கருணாநிதி வரும் 14ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதென அறிவிப்பு செய்துள்ளது போற்றுதலுக்குரியதாகும்.
இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதும் இதனைக் கண் துடைப்பு நாடகமென விமர்சிப்பதும் துளியளவும் ஈழத் தமிழர்களுக்கு பயனளிப்பதாக அமையாது.
எனவே, ஈழத் தமிழர் நலன் கருதியேனும் கட்சி அரசியல் நலன்களை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு குரலெழுப்ப முன்வர வேண்டுமென அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை மனித நேய அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது.
மேலும் ஈழத் தமிழினத்தை பாதுகாக்கும் உணர்வோடு த.வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்க கூட்டமைப்பு வரும் 17 அன்று தமிழகம் தழுவிய அளவில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.
வணிகப் பெருமக்களின் தமிழ்மான உணர்வை விடுதலைச் சிறுத்தைகள் மனமார வரவேற்றுப் பாராட்டுகிறது. இந்தியப் பேரரசை தலையிட வைத்து இனப் படுகொலையைத்தடுத்து நிறுத்திட வணிகர்களின் இந்த கடையடைப்பு அறப்போரை ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஒத்துழைத்து வெற்றிபெற வைப்பது மிக மிக இன்றியமையாததென விடுதலைச் சிறுத்தைகள் உணர்கிறது என்று கூறியுள்ளார்.