பறிமுதல் செய்த பைக்கை சொந்தத்திற்கு பயன்படுத்திய ஏட்டு சஸ்பெண்ட்!
சென்னை: அதிமுக நகரச் செயலாளர் கொலை வழக்கில் கைதான குற்றவாளியிடமிருந்து பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை அருகே அம்பத்தூரில் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுக நகரச் செயலாளராக இருந்த ரவி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த விநாயகமூர்த்தி என்பவர் கடந்த 8 மாதத்திற்கு முன்பு பாடி பகுதியில் 2 சக்கர வாகனத்தில் வரும்போது தலைமை காவலர் தினகரன் அவரை பிடித்தார். விநாயக மூர்த்தி வைத்திருந்த 2 சக்கர வாகனத்தை விட்டுவிட்டு அவர் தப்பியோடி விட்டார்.
இதையடுத்து பைக்கை பறிமுதல் செய்த தினகரன், அதை கொரட்டூர் காவல் நிலையத்தில் சேர்த்தார். அதன் பின்னர் யாருக்கும் தெரியாமல், தனது சொந்த பயன்பாட்டுக்கு பைக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து சென்னை புறநகர் ஆணையர் ஜாங்கிட்டுக்கு புகார் போகவே அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தினகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications