சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு முக்கியமான வடகிழக்கு பருவ மழை இன்னும் தொடங்கவில்லை. எனினும், கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கு நல்ல மழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவில் கனமழையாக வெளுத்து வாங்கியது. மாநகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த மழை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நகரின் சிற்சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்றிரவு முதல் பெய்து வரும் மழைக்கு வடகிழக்கு பருவ மழை காரணம் அல்ல என்றும் தென்மேற்கு பருவ மழையே பெய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications