ஆந்திராவில் வன்முறை: 6 பேர் உயிருடன் எரித்து கொலை
ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பைன்ஸா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை துர்கா சிலை ஊர்வலம் நடந்தது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. அதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
பதட்டம் தொடர்ந்ததை அடுத்து பைன்ஸா நகரிலும் அதன் சுற்றுபுற பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பைன்ஸா நகருக்கு 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடோலி கிராமத்துக்குள் கலவர கும்பல் புகுந்து வன்முறைய கட்டவிழ்த்தது. கிராமத்தில் இருந்த சில வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆந்தர மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பெயின்ஸா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கலவரம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் ஜன ரெட்டி, டிஜிபி எஸ்எஸ்ஜி யாதவ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.