நிதி நெருக்கடி: ஏர் இந்தியாவுக்கு ரூ.2500 கோடி 'உதவி'!
ஏர் இந்தியாவின் விமான சேவைக்கும் கூடுதல் விமானங்கள் வாங்குவதற்கும் ரூ.40,000 கோடி தேவைப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு வெறும் ரூ. 145 கோடி தான்!. இந்தத் தொகையை வைத்துக் கொண்டு புதிதாக எந்த சேவையையும் தொடங்க முடியாத நிலை.
எனவே ஏர் இந்தியாவின் நிதி நெருக்கடியைத் தீர்க்க அவசர கால நிதியாக ரூ.2,500 கோடியை மத்திய அரசு வழங்குவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் இன்று அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடக்கும் விமானக் கண்காட்சியில் பங்கேற்ற பிறகு அவர் கூறியதாவது:
77 ஆண்டுகளாக நாட்டின் பிரதான விமான சேவை நிறுவனமாகத் திகழும் ஏர் இந்தியாவின் ரொக்க இருப்பை அதிகரிப்பது இன்று அவசியம். பங்கு முதலீடு, குறுகிய காலக் கடன்கள் மூலம் இப்போதைக்கு ரூ.2500 கோடி வழங்கப்படும்.
மற்ற போட்டி விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பயணிகள் வருகை குறைவு மற்றும் வருமானக் குறைவு ஏர் இந்தியாவுக்கும் ஏற்பட்டுள்ளது நிஜம்தான்.
மற்றபடி ஏர் இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டில் இறங்கப் போவதாகக் கூறப்படுவது குறித்து இப்போது ஒன்றும் சொல்ல முடியாது என்றார்.