பணி நீக்கம்-ஜெட்டுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை
மும்பை: நீக்கப்பட்ட ஊழியர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் மும்பையில் இருந்து அந்த நிறுவனத்தின் ஒரு விமானத்தைக் கூட இயங்க விடாமல் தடுப்போம் என மகாராஷ்டிர நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் இன்று மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நீக்கம் தொடர்பாக பலருக்கு கடிதம் கூடத் தரப்படவில்லை. வாய்மொழியாகவே வேலையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பல ஊழியர்களுக்கு உறுதியளித்தபடி 30 நாள் ஊதியம் கூடத் தராமல் பணி நீக்க கடிதங்கள் தரப்பட்டுள்ளன.
அமைச்சர் நழுவல்:
இது தொடர்பாக விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் தலையிட்டு தங்களுக்கு நியாயம் கிடைக்க வகை செய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரியுள்ளனர்.
ஆனால், ஊழியர்களை நிறுவனம் பணி நீக்கும் விஷயத்தில் தான் தலையிட முடியாது என படேல் கூறிவிட்டார்.
அவர் கூறுகையில், விமான நிறுவனங்கள் எரிபொருள் மீதான வரிகளைக் குறைக்குமாறு கேட்டு கேட்டு சலித்துவிட்டன. ஆனால், நிதியமைச்சகமும் பெட்ரோலிய அமைச்சகமும் அதை ஏற்காததால் தான் விமானத்துறைக்கு இவ்வளவு நஷ்டமும் சிக்கலும் ஏற்பட்டுள்ளது என ப.சிதம்பரம் மற்றும் முரளி தியோரா மீதான தனது எரிச்சலை பிரபுல் படேல் வெளிப்படுத்தினார்.
ஜெட்டுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை:
இதையடுத்து இந்த விவகாரத்தை மகாராஷ்டிர நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே வசம் ஊழியர்கள் கொண்டு சென்றனர்.
இதையடுத்து ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்காவிட்டால் ஜெட் ஏர்வேசின் எந்த விமானமும் புறப்பட முடியாது என ராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் ஜெட் ஏர்வேஸ் பிடிவாதம் பிடிக்காமல் மீண்டும் ஊழியர்களை பணியில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மும்பையிலிருந்து ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானமும் கிளம்ப முடியாது. விரைவில் ஜெட் நிறுவன அதிகாரிகளை சந்தித்துப் பேசுவேன் என்றார்.