இலங்கை தமிழர் நலன்-எம்பி பதவியை ராஜினாமா செய்தார் கனிமொழி
சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு வார காலத்துக்குள் இலங்கையில் தமிழர்கள் மீதான சி்ங்கள ராணுவத்தி்ன் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவிகளை உடனே நிறுத்த வேண்டும், இதை இரு வாரத்துக்குள் செய்யாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது ராஜ்யபசா எம்பிக்களுக்கும் பொறுந்தும் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் கனிமொழி. இது தொடர்பாக தனது கடிதத்தை கட்சியின் தலைவரான கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனிமொழியைத் தொடர்ந்து பிற திமுக எம்பிக்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை கருணாநிதியிடம் அளிப்பார்கள் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் இறுதி முடிவை எடுப்பார் என்று தெரிகிறது.
மக்களவையில் திமுகவுக்கு 16 எம்பி்க்களும் காங்கிரசுக்கு 10 எம்பிக்களும் பாமகவுக்கு 5 எம்பிக்களும், மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 எம்பிக்களும் உள்ளனர்.
மதிமுகவுக்கு 4 எம்பிக்கள். இதில் செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் திமுக கூட்டணியில் உள்ளனர்.
அதிமுக, பாஜகவுக்கு ஒரு எம்பி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபாவில் அதிமுகவுக்கு 7 எம்பிக்களும் திமுக, காங்கிரசுக்கு தலா 4 எம்பிக்களும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமகவுக்கு தலா ஒரு எம்பியும் உள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்பிக்களில் 12 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணி எம்பிக்கள் கூண்டோடு விலகினால் வைகோவும் தனது இரு எம்பிக்களையும் ராஜினாமா செய்ய உத்தரவிடுவார் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அதிமுக என்ன செய்யுமோ தெரியவில்லை.