மின் துறையை தனியார்மயமாக்க முயற்சி: சிபிஎம்
திண்டுக்கல்: தமிழக மின் துறையை தனியார் மயமாக்க முயற்சி நடைபெற்று வருவதாக சிபிஎம் எம்எல்ஏ பாலபாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
மின் வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திண்டுக்கல் தலைமை மின்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, பாலபாரதி எம்எல்ஏ பேசியதாவது
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றபோது மின்வெட்டு சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்றார்.
அதன்பிறகு 3 மாதம் கழித்து ஒரு மணி நேரம் மின்வெட்டு என அரசு அறிவித்தது. அதன்பிறகு 2 மணிநேரமாக அது உயர்ந்தது. இப்போது அரசு ஆறரை மணி நேரம் மின்வெட்டை அறிவித்துள்ளது.
அரசு அறிவித்த இந்த ஆறரை மணி நேர மின்வெட்டு மக்கள் மத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் நகரில் கூடுதலாக அறிவிக்கப்படாத 5 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 12 மணி நேர மின்வெட்டால் திண்டுக்கல் நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்த மின்வெட்டின் காரணமாக மாணவர்கள், மருத்துவமனை, வர்த்தகர்கள், வங்கி என்று பாதிப்புகளால் மக்கள் அவதி்பட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது தமிழக அரசு மின் துறையை இரண்டாக பிரித்து உள்ளது.
மின்துறையை தனியார் மயமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவைகளை மாநில அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை, போக்க மத்திய அரசிடம் கூடுதலாக மின்சாரத்தை பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்












Click it and Unblock the Notifications