சாஸ்திரி பவனில் தீ: கோப்புகள் எரிந்து நாசம்
சென்னை: பாஸ்போர்ட், அமலாக்கப் பிரிவு, சிபிஐ உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்படும் செனனை சாஸ்திரி பவனில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான கோப்புகள், கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் கட்டடத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் உள்பட 58 மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளன. இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும தென்மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை 5.45 மணிக்கு திடீரென இந்த அலுவலகத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செக்யூரிட்டி உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
தீயணைப்பு படையினர் வருவதற்குள் தீ கொளுந்து விட்டு எரிந்தது. பக்கத்தில் உள்ள மத்திய அரசு தொழில் துறை தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதி மன்ற கட்டிடத்திற்கும் தீ பரவியது. நீதிபதி அமரும் அறையின் ஒரு பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தது.
அதற்குள் எழும்பூர், தேனாம்பேட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்தன. சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் தொழில்நுட்ப கல்விக்குழும அலுவலகத்தில் இருந்த கோப்புகள், கம்ப்யூட்டர்கள், ஏசி மெஷின்கள் எரிந்து சாம்பலானது. நீதிமன்ற அலுவலக கட்டடத்திலும் சேதம் ஏற்படடது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணி குடோனில் தீ:
அதே போல சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள துணி குடோனிலும் நேற்றிரவு தீ பிடித்தது. ரமேஷ் என்பவரின் திருமண மண்டபத்தின் கீழே துணி குடோன் இருந்தது.
அதிகாலை 2 மணிக்கு குடோனில் தீ பிடித்ததில் துணிகள் எரிந்து சாம்பலாயின. பல பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அதே போல் தாம்பரம் தீபம் மருத்துவமனையில் இன்று காலை மின்சாதன பெட்டியில் திடீரென தீப்பிடித்து கொண்டது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது.