அணைகள் நிரம்பின-குற்றாலத்தில் வெள்ளம்!
நெல்லை: கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் தென் மாவட்டங்களில் அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் நிரம்பி வருகின்றன. குற்றால அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இடி மின்னலுடன் விடிய விடிய பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல இடங்களில் குளங்கள் நிரம்பி, உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றாலம், ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடவி நயினார், கருப்பாநதி அணை, பாபநாசம், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குண்டாறு, கருப்பாநதி, மேட்டை நீர்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன.
செங்கோட்டை, புளியரை, கற்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலையில் உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டது தெரியாமல் தென்காசி கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின.
பின்னர் அவசர அவசரமாக மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர். கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் நனைத்தபடியே வீடு திரும்பினர்.












Click it and Unblock the Notifications