உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஊர்வலம்
சென்னை: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 11 மணியளவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மன்றோ சிலையில் இருந்து அரசினர் தோட்டம் வரை ஊர்வலம் சென்றனர். இதில் இலங்கை அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பேரணிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமை தாங்கினார். பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்ட நூற்றுக் கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் முடிவில் ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.
இந்தப் போராட்டம் நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய புறக்கணிப்பு காரணமாக உயர்நீதிமன்றத்தில் பணிகள் முற்றிலுமாக முடங்கின.
நாளை உண்ணாவிரதம்:
போராட்டத்தின் 2ம் நாளான நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பை வழக்கறிஞர்கள் மேற்கொள்வதுடன் உண்ணாவிரதமும் கடைப்பிடிக்க உள்ளனர்.
இதேபோல தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளுமாறு சென்னை உயர்நீதி மன்ற வக்கீல்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.