இல்லாத பாலத்தை இடிக்காதே என்கிறார்கள்: அமைச்சர்
தென்காசி: பாபர் மசூதியை இடித்தவர்கள், இல்லாத பாலத்தை இடிக்காதே என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று பாஜகவை தாக்கியுள்ளார் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.
தென்காசி அருகேயுள்ள சுரண்டையில் நடந்த பல்வேறு பாலங்கள் திறப்பு விழாவில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த காலங்களில்தான் அதிக மேம்பாலங்கள், பாலங்கள் கட்டப்பட்டன. 89ம் ஆண்டில் 220 பாலங்களும், 2006ல் 172 பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறைகள் இணைந்து 90 ரயில்வே மேம்பாலங்களை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.
நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள தலைமை பொறியாளர்கள் முதல் சாலை ஆய்வாளர் வரை உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவாக நிரப்பப்பட்டு வருகிறது.
உலக வங்கி நிதி உதவியோடு ரூ. 2118 கோடி செலவில் ஆற்காடு முதல் தூத்துக்குடி வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலை பணி தீவிரப்படுத்தப்பட்டு விரைவாக நடந்து வருகிறது.
இந்தியாவிலுள்ள 13 பெரிய துறைமுகங்களில் மூன்று தமிழ்நாட்டில் உள்ளது. எண்ணூர், சென்னை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் வளர்ச்சி பெற்றால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
சிலர் சேது கால்வாய் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். கடந்த 1994ம் ஆண்டு பாபர் மசூதியை இடித்தவர்கள், இல்லாத பாலத்தை இடிக்காதே என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டில் நல்ல திட்டங்களை எதிர்த்து முட்டுகட்டை போடுவதற்கென்றே அதிக கட்சிகள் இங்கு உள்ளன என்றார்.