ஆண்டிப்பட்டி-ஆழ்துளை குழாயில் விழுந்த சிறுவன் பலி
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டியில் ஆழ்துளை கிணற்றின் குழாயில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலியானான்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துக்கருப்பன்-அம்மச்சி தம்பதியின் மகன் தமிழ் (3).
தங்களது குடும்பத் தோட்டப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனான். முத்துக்கருப்பனின் தோட்டத்தில் 500 அடி ஆழ ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு அதன் வெளிப்பகுதி சாக்கு பையால் மூடப்படிருந்தது.
ஆனால் அந்த சாக்குப் பை விலகி இருந்ததால் சிறுவன் தமிழ் அந்த குழாய்க்குள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர்.
ஆழ்துளை கிணற்றில் அவர்கள் சோதனையிட்டபோது 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுரண்டியைப் பயன்படுத்தி சிறுவனை மேலே இழுத்தனர்.
ஆனால், அவனை வெளியே கொண்டு வர சுமார் 3 மணி நேரமானது. அதற்குள் அந்தச் சிறுவன் பலியாகியிருந்தான்.