புதுச்சேரியில் போலி மதுபானங்கள் பறிமுதல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போலி மதுபானங்கள் கடத்திய 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் சீனியர் காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், எஸ்.பி.தெய்வசிகாமணி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மோகன் குமார் தலைமையில் போலீசார் திருக்கனூரில் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கூனிசம்பட்டி காலனி பகுதியில் ஒரு வீட்டில் போலி மது பானங்கள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக, போலீசார் அந்தப் அந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்த போது, அங்கு எரிசாராயத்தில் கலர் பவுடர் கலந்து போலி பிராந்தி தயாரிக்கப்பட்டு வருவதை கண்டறிந்தனர்.
போலி பிராந்தி தயாரித்த, ஆனந்தராஜ், ஞானமூர்த்தி, ஆனந்த் பாபு, விஜயானந்த், சண்முக சுந்தரம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த 24 ஆயிரத்து 192 போலி பிராந்தி பாட்டில்களும், 50 லிட்டர் எரிசாராயமும், அதற்கு பயன்படுத்திய இயந்திரங்களும், மூன்று மோட்டார் சைக்கிள்களையும், போலி மதுபான பாட்டில்களுக்கான லேபிள்களும் பறிமுதல் செய்யப்பட்டு கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.