வங்கிகளுக்கான கடன் வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி
மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகை மீதான வட்டி விகிதம் (repo rate) 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கிகள் குறைந்த வட்டிக்கு பணம் பெற முடியும்.
சந்தையில் பணத் தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய இருப்புத் தொகையை (cash rererve ratio-crr) மத்திய அரசு குறைத்தது.
இதன்மூலம் வங்கிகளின் கையிருப்புத் தொகை உயர்ந்தது. இந் நிலையில் வங்கிகளின் பத்திரங்கள் மீது ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் தொகை மீதான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்கிகளிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும். இந்தப் பணம் சந்தைக்கு வரும் என்பதால் சந்தையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
முதலில் பணவீக்கத்தை (சந்தையில் அதிக அளவில் பணம் இருப்பது) கட்டுப்படுத்த ரெபோ ரேட்டை மத்திய அரசு உயர்த்தியது. சிஆர்ஆர்யையும் அதிகரித்தது.
இப்போது பண வீக்கம் ஒரு கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளதால் சந்தையில் பணப் புழகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பணவீக்கம் குறையும்-ப.சி:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த ரெபோ ரேட் குறைப்பால் நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரித்து பண வீக்கம் குறையும். மேலும் விலைவாசியும் குறையும்.
இது கடன் கொடுக்கும் வங்கிகளுக்கும், கடனுதவி பெறுவோருக்கும் உதவிகரமாக இருக்கும்.
பங்குகள் ஏலம் நிறுத்தம்:
இதற்கிடையே ரூ. 10,000 கோடி மதிப்புள்ள அரசின் பங்குகளை ஏலம் விடத் திட்டமிட்டிருந்த ரிசர்வ் வங்கி அந்த திட்டத்தை தாற்காலிகமாக கைவிட்டுவிட்டது.
இந்த ஏலம் வேறு நாளில் நடக்கும் என அறிவித்துள்ளது.