உயர் ஜாதி ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு-மாயாவதி
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் உயர் ஜாதிகளைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
மேலும் ஜாதி செல்வாக்கு உள்ளவர்களுக்கே தேர்தல்களில் போட்டியிட சீட் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
உயர் ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
உயர் ஜாதியில் உள்ள ஏழைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. இந்த ஜாதி இளைஞர்கள் வேலையில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், உயர் ஜாதி ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் பகுஜன் சமாஜ் கட்சியின் மற்ற பிரிவினருடன், குறிப்பாக உயர் ஜாதி ஏழைகள், இளைஞர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
அனைத்து ஜாதி ஏழைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நாட்டில் புரட்சியை உருவாக்க முடியும் என்று அம்பேத்கர் கூறியுள்ளார்.
எங்கள் கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்க உயர் ஜாதியினர் ஆதரவு அளிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலின்போது, தங்கள் ஜாதியினரின் ஆதரவை முழுமையாக பெறும் தகுதியுள்ளவர்களுக்கே சீட் தருவேன்.
சீட் கேட்பவருக்கு தன் சொந்த சமூகத்தினரிடையே செல்வாக்கு உள்ளதா, அவர்களின் வாக்குகளை சிதறாமல் பெற முடியுமா என்பதை மதிப்பீடு செய்யப்படும். அப்படிப்பட்டவர்களுக்கே சீட் தரப்படும். அப்போது அவர்கள் எளிதில் வெற்றி பெறுவதோடு, பகுஜன் சமாஜ் கட்சியின் ஓட்டு வங்கியும் வீணாகாது என்றார் மாயாவதி.