For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக-மதிமுக கூட்டணி பலமாக உள்ளது: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: அதிமுக-மதிமுக கூட்டணியை பிரிக்க கருணாநிதி பல்வேறு திட்டங்களை தீட்டினார். அவரது முயற்சி பலிக்கவில்லை. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது என்று என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழா நடந்தது. நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமை வகித்தார்.

இதில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:

மாமன்னன் புலித்தேவன் பிறந்தநாள் விழா இங்கு மாநாடு போல் நடக்கிறது. இன்றைக்கு அரசியல் பொது எதிரிக்கு எதிராக கட்சிகள் கூட்டணி அமைப்பது போல, சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையருக்கு எதிராக பாளையக்காரர்களுடன் கூட்டணி அமைத்து பூலித்தேவன் போரிட்டார்.

ஆனால், சூழ்ச்சியாலும், துரோகத்தாலும் போரில் வீழ்த்தப்பட்டார். எனினும், தனது வாழ்நாளில் அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைத்தார். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.

இன்றைய இளைஞர்களும் அத்தகைய தலைவர்களின் கொள்கையைப் பின்பற்றி லட்சியங்களுடன் வாழ வேண்டும். சமூக ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

எங்களை பிரிக்க முயற்சி:

பின்னர் காரியாபட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:

அதிமுக-மதிமுக கூட்டணியை பிரிக்க பல்வேறு திட்டங்களை கருணாநிதி தீட்டினார். அவரது முயற்சி பலிக்கவில்லை.

காலம் மாறி வருகிறது. இப்போது கறுப்பர் இனத்தை சேர்ந்த பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடுகிறார். அவருடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அது போல் தமிழகத்தில் சமுதாய மாற்றம் ஏற்படும் காலம் நெருங்கிவிட்டது.

நாட்டு நலனுக்கு இளைஞர்கள் பாடுபட முன்வர வேண்டும். இலங்கையில் நடப்பது உரிமைப் போரட்டம். இளைஞர்கள் உரிமைப் போராட்டத்திற்கு கைகொடுக்க வேண்டும். அதற்கு இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றார்.

புலிகளை தோற்கடிக்க முடியாது:

இதைத் தொடர்ந்து கோவில்பட்டியில் வீட்டு உபயோக சாதனங்கள் விற்பனை செய்யும் கடையை திறந்து வைத்த அவர் பேசியதாவது:

ராஜபக்சே ராணுவம், இலங்கைத் தமிழர்களை அழித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அரசு அமைதியாக இருந்ததால்தான், இப்போது இலங்கை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அங்கு நடக்கும் சண்டையில் ராணுவத்தால், புலிகளை தோற்கடிக்க முடியாது. தமிழர்களை அழிக்க, அந்நாட்டிற்கு ராணுவத்திற்கு ரேடார் உள்ளிட்டவற்றை உதவிகளை வழங்கி பிரதமர் மன்மோகன் சிங் துரோகமிழைத்து விட்டார்.

அதிமுக-மதிமுக, கூட்டணி வலுவாகவுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X