நவ.1 முதல் மீண்டும் குமரி வள்ளுவர் சிலைக்கு படகு
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நவம்வர் முதல் தேதி முதல் படகு சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.
சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடலுக்கு நடவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைகள் பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளது.
விவேகானந்தர் பாறைக்கு பூம்புகார் போக்குவரத்துக் கழகம் மூலம் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நவீனப்படகு வாங்கப்பட்டுள்ளது. இதற்கு, எம்.எல். பொதிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பல்வேறு வசதிகள் உடைய இந்த படகு சேவையை அமைச்சர் சுரேஷ்ராஜன் நேற்று தொடங்கி வைத்தார். சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் சன்வத்ராம், செயலர் இறையன்பு, நிர்வாக இயக்குனர் ராஜாராம், கலெக்டர் ஜோதி நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சுரேஷ்ராஜன் கூறியதாவது:
திருவள்ளுவர் சிலையை உப்புக் காற்றிலிருந்து காப்பாற்ற ரூ.76 லட்சம் செலவில் ரசாயன கலவை பூசும் பணி இறுதிகட்டத்தில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிந்துவிடும்.
இதையடுத்து நவம்பர் முதல் தேதி மீண்டும் திருவள்ளுவர் சிலைக்கு, படகு சேவை தொடங்கப்படும். தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.45 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள மாஸ்டர் பிளான் முடியும் நிலையில் உள்ளது. கன்னியாகுமரியில் கேபிள் கார் மற்றும் ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்தும் திட்டம் தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் கன்னியாகுமரி வரலாறு, விவேகானந்தர், திருவள்ளுவர் பற்றிய ஒலி ஒளி காட்சிக்கூடம் ரூ.2.25 கோடி மதிப்பில் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் ரூ.66 லட்சம் செலவில், நவீனப்படுத்தப்பட்ட கேப் ஹோட்டல் மற்றும் பூங்காவை திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications