தொடர்ந்து விளாசும் மழை-வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை
சென்னை: சென்னை நகரில் பெய்து வரும் தொடர் கன மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதிலும் இயல்பு நிலை பாதித்துள்ளது.
சென்னையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரமே வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது.
புறநகர்களில் உள்ள தாழ்வான பகுதிகள் அனைத்தும் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
மழை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்ைத விட வட தமிழகத்தில்தான் அதிக அளவில் மழை இருக்கும் எனவும் அது எச்சரித்துள்ளது.
சென்னை நகரில் திருவொற்றியூர் கார்கில் நகரில் வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் 4000க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
பொன்னமராவதி அருகே குடுமியான் மலை - காரையூர் தரைப்பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர், அரியலூர், கடலூர், வேலூர், ஈரோடு, திருச்சி என பல மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது.
இன்று காலையும் பலத்த மழை பெய்ததால் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications