தந்தை, மகன்களை நிர்வாணப்படுத்தி போலீஸ் சித்திரவதை
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பனையூர் தமுமுக தலைவர் யூசுப் மற்றும் அவரது இரு மகன்களை காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது.
காஞ்சி மாவட்டம் கிழக்கு கடற் கரைச் சாலையில் உள்ளது பனையூர். இப்பகுதியின் தமுமுக கிளைத் தலைவராக இருப்பவர் யூசுப்.
யூசுப் அவரது தம்பி காதர் பாஷா ஆகியோருக்கும், யூசுபின் தந்தை தமீம்ஷா மற்றும் மற்ற தம்பிகள் முஜிபு, பரகத் ஆகியோருக்கும் இடையே தங்கள் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதில் யூசுபின் வீடு தாக்கப்பட்டது.
இதையறிந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ, இப்பிரச்சினையில் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் காவல் நிலையம் சென்று புகார் அளிக்காத நிலையில், தானாகவே இப்பிரச்சினையில் தலையிட்டு காவலர்களை அனுப்பி இரண்டு தரப்பினரையும் தனித்தனியே காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார்.
அவர்களோ காவலர்களிடம், நாங்களே எங்கள் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள் வோம் என்று சொல்லியுள்ளனர்.
இதையடுத்து ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ, உதவி ஆய்வாளர் மீனாட்சிசுந்தரத்தையும் சில போலீஸ்காரர்களையும் அனுப்பி இரண்டு தரப்பினரையும் கட்டாயப்படுத்தி அழைத்து வரச் செய்ததாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம், "இப்பிரச்சினை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்து விட்டது. ஆகவே நீங்கள் உங்கள் குடும்பத்தார் மீது புகார் கொடுங்கள். அதிகாரிகள் முன்னிலையில் சமரசம் பேசி புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்'' என பேசி புகார் பெற்றுள்ளார்.
மறுபுறமோ, "உங்கள் மீது யூசுப் புகார் அளித்துள்ளார், ஆகவே நீங்கள் அவர் மீது புகார் கொடுங்கள்'' என்று கூற, அவர்களும் புகார் அளித்துள்ளார்கள். ஆனால் அப்புகாரைப் படித்த ஆய்வாளர், "இந்தப் புகார் வேண்டாம். நான் சொல்வது போல புகார் மனு எழுதுங்கள்'' எனக் கூறி புகார் பெற்றுள்ளார்.
பின்னர் இரண்டு தரப்பினரையும் "சமரசம் பேசலாம் வாருங்கள்'' எனக்கூறி இரண்டு தரப்பினரிடமும் இன்னும் சற்று நேரத்தில் துணை ஆணையர் வந்து விடுவார் எனக் கூறி இரவு 12 மணி வரை காலம் கடத்தியுள்ளார்.
பிறகு யூசுபின் தந்தையையும், தம்பிகளையும் நிர்வாணப்படுத்தியுள்ளார். இதை எதிர்த்த யூசுப்பை கட்டாயப்படுத்தி அவரையும் நிர்வாணமாக்கியுள்ளார்.
இரவு 1 மணிக்கு மேல் காவல் நிலையம் வந்த துரைப்பாக்கம் சரக காவல் உதவி ஆணையர் ராதாகிருஷ் ணன், ஆய்வாளர் பெர்னான்டோ இரு வரும் யூசுப் உட்பட அவரது குடும்பத் தினர் அனைவரின் மீதும் கடுமையான குற்றப் பிரிவுகளைக் கொண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
முஸ்லிம்கள் அனைவரும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ நிகழ்த்திய மனித உரிமை மீறல் அப்பகுதி முஸ்லிம்களிடம் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும், பரங்கிமலை ஒன்றிய தமுமுக செயலாளர் ஜாகீர் இதுதொடர்பாக மாவட்டத் தலைவர் எம். மீரான் மொய்தீன், மாவட்டச் செயலாளர் யாக்கூப் ஆகியோரிடம் கூற, மனித உரிமை மீறல் நிகழ்த்திய சேகர் பெர்னான்டோவின் அராஜகத்தைக் கண்டித்து மேற்படி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பரங்கி மலை ஒன்றிய தமுமுக சார்பில் நீலாங்கரை காவல் நிலையம் முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்க, ஒரே நாளில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு கைதானார்கள்.
இதுதொடர்பாக மாவட்டத் தலைவர் எம். மீரான் மொய்தீன் கூறுகையில், "இப்பகுதியில் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களிடமும் அதிகார துஷ்பிரயோகத்தைக் கையாளும் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர்னான்டோவிற்கு, துரைப்பாக்கம் ஏ.சி. ராதாகிருஷ்ணன் துணை போகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பாதிக்கப்பட்ட யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவும், சேகர் பெர்னான்டோ மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரு கிறோம். அந்நடவடிக்கை எடுக்கும்வரை மாநிலத் தலைமையின் ஆலோசனையுடன் விரைவில் மாவட்டம் தழுவிய அளவில் பெரும் போராட்டங்களை அறிவிப்போம்'' என்றார்.