சினிமா ஆசை..எல்லை தாண்டிய பாக் சிறுவன் கைது
இஸ்லாமாபாத்: சினிமா ஆசையால் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டு சிறுவன் கைது செய்யப்பட்டான்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவன் நசீர் சுல்தான். அங்கு பத்தாவது வகுப்பு படித்து வருகிறான். இவனுக்கு ஷாருக் கான் என்றால் உயிர். ஷாருக் கான் மீது கொண்ட வெறித்தனமான அன்பினால், பாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசை துளிர் விட்டது சுல்தானுக்கு.
இந்த ஆசை வேகமாக வளர்ந்து எல்லை கடந்து இந்தியாவுக்கு செல்ல தூண்டி விட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி தனது சொந்த மாநிலமான வட மேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து கிளம்பிய நசீர் சுல்தான், திருட்டுத்தனமாக இந்தியாவின் பஞ்சாபுக்குள் வந்து விட்டான்.
பள்ளிக்கூட சீருடை, பள்ளிப் பையுடடனேயே பஞ்சாபுக்கு சுல்தான் வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுல்தானின் தந்தை சுல்தான் சரீன் அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கிறார். பஞ்சாப் வந்து சேர்ந்த சுல்தான், 2 நாட்கள் கழித்து தந்தைக்கு போன் செய்து தான் பஞ்சாப் வந்த விவரத்தை தெரிவித்தான். மும்பைக்குப் போகப் போவதாகவும் கூறினான்.
அடுத்த கால் மணி நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி போன் அவர்களுக்கு வந்தது. அதில் வந்த செய்தி என்னவென்றால் உங்களது மகன் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளான் என்பது.
தற்போது பரீத்கோட் சிறையில் சுல்தான் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பெற்றோர், தங்களது மகனின் விடுதலைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். சுல்தான், வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள சுக்யாதான் என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவன். இவனது பெற்றோர் வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சரீன் இதுகுறித்து கூறுகையில், எனக்கு இந்தியாவில் யாரையும் தெரியாது. என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்திய அரசு எனது மகனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தனது மனைவி மிகுந்த மன உளைச்சலில் சிக்கி பெரும் கவலையில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.