தமிழகத்தில் கன மழைக்கு இதுவரை 13 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பல அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள், ஏரிகளில் உடைப்பெடுத்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் விளைவாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையும் விலகாமல் தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது.
தொடர் மழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பல ஏரிகள், குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. சில அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மட்டும் கன்னியாகுமரி, நாமக்கல், தூத்துக்குடி, சேலம், தேனி மாவட்டங்களில் தலா ஒருவர் என ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி விட்டன. பல கண்மாய்கள் உடைப்பெடுத்துள்ளன.
மேலூர் அருகே உள்ள உப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நத்தம், துவரங்குறிச்சி வழியாக பஸ்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டு வருகின்றன.
வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோச மங்கையில் உள்ள கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அங்கு மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையிலான ரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள் விழுந்துள்ளன. எனவே 25ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள அணை தொடர் மழையால் நிரம்பியுள்ளது. இதனால் அணைக்கு வரும் கூடுதல் நீர் அப்படியே பெண்ணையாற்றில் திறந்து விடப்படுகிறது.
அணையிலிருந்து நீர் அதிகம் வருவதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென் பெண்ணையாற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.