தந்தையிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம்: சகோதரிகள் கைது
கோவை: தங்களது தந்தையிடம் பணம் பறிக்க கல்லூரி நண்பர்களை வைத்து கடத்தல் நாடகம் நடத்திய இரு சகோதரிகளை போலீஸார் கைது செய்தனர்.
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி. ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவரது மகள்கள் ஜோலா (22), பூஜா (18). கல்லூரியில் படித்து வருகின்றனர்.
தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தனர். இந் நிலையில் சமீபத்தில் இருவரும் கல்லூரிக்குப் புறப்பட்டு சென்றனர். கல்லூரி முடிந்த ஜோலா மட்டும் அன்று மாலை வீடு திரும்பினார். பூஜாவை காணாமல் அவரது பெற்றோர் பதறினர்.
ஜோலாவிடம் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். மறுநாள் ரவியின் செல்போனுக்கு பேசிய மர்ம நபர், உங்கள் மகள் பூஜா எங்களிடம்தான் இருக்கிறாள். அவளை உயிருடன் பார்க்க வேண்டுமென்றால் ரூ.1 கோடி தர வேண்டும் என்று மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரவி, இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். கடத்தப்பட்ட மாணவியை பிடிக்க துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் அமைக்கப்பட்ட 7 தனிப்படைகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
ரவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நபர் பல்வேறு ஊர்களில் இருந்து பேசியிருப்பதையும், பல்வேறு எண்களில் இருந்து தொடர்பு கொண்டிருப்பதையும் செல்போன் நிறுவனம் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். இதற்கிடையில் பூஜா கடத்தப்பட்ட பிறகு ரவியின் வீட்டில் நடக்கும் செயல்களையும் ஒன்றுவிடாமல் கடத்தல்காரர்கள் கூறினர்.
இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ரவியின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் கடத்தல்காரர்களுக்கு எப்படி தெரிகிறது என்று விசாரித்தபோது, ஜோலா மீது சந்தேகம் ஏற்பட்டது. ஜோலாவின் செல்போனை வைத்து அவருக்கு எங்கிருந்து அழைப்புகள் வருகின்றன என்பதை ரகசியமாக போலீஸார் கண்காணித்தனர்.
ரவியின் செல்போனுக்கும் ஜோலாவின் செல்போனுக்கும் வரும் அழைப்புகளும் ஒரே ஊரில் இருந்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் கடத்தல் கும்பல் பூஜாவை கை, கால்களை கட்டிப்போட்ட நிலையிலும் பல்வேறு கோணங்களிலும் போட்டோ எடுத்து அதை செல்போன் மூலம் பதிவு செய்து, போத்தனூர் அருகே ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு சி.டி. கிடைக்கும் என்று ரவிக்கு கடத்தல் கும்பல் போனில் கூறியது. இதையும் போலீசாரிடம் ரவி தெரிவித்தார்.
கடத்தல்காரன் எங்கிருந்து பேசுகிறான் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். விசாரணையில் பூஜா, ஜோலா படிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் வேலாந்தாவலத்தை சேர்ந்த கார்த்திக், மற்றொருவர் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் தந்த தகவலின்பேரில் கடத்தல் நாடகத்துக்கு திட்டம் போட்டுக் கொடுத்த ஜோலா, பூஜாவையும் கைது செய்தனர். தந்தையிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம் ஆடியது விசாரணையில் தெரிய வந்தது. மாணவர்களிடம் இருந்து 5 சிம்கார்டு, செல்போன்கள் மற்றும் வாகனங்களின் ஸ்டிக்கர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications