மதுரை-சு.சுவாமி அலுவலகம் மீது தாக்குதல்-சூறை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவைத் தலைவர் கண்ணப்பனும் நேற்று கைது செய்யப்பட்டனர். பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கையை சுப்ரமணியம் சுவாமி வரவேற்று அறிக்கை விட்டிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரை பிபி குளம் பகுதியில் உள்ள ஜனதாக் கட்சி அலுவலகத்தை 25 பேர் கொண்ட புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களும், வக்கீல்கள் குழுவும் தாக்கி சூறையாடியது.
அங்கிருந்த பொருட்களை அக்கும்பல் அடித்து நொறுக்கிய அவர்கள் கற்களை வீசி கண்கணாடி ஜன்னல்களை உடைத்தனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த உறுப்பினர் பாரங்களை எடுத்து கிழித்தெறிந்தனர்.
அலுவலகத்தில் இருந்த டியூப்லைட்டுகள், நாற்காலிகள், மேசைகள் ஆகியவற்றையும் அடித்து சேதப்படுத்தினர்.
கட்சி அலுவலகத்திற்கு வெளியே இருந்த கொடிக் கம்பத்தையும் கஷ்டப்பட்டு பிடுங்கி எறிந்தனர்.
அந்த சமயத்தில் அலுவலகத்தில் இருந்த மாவட்டத் தலைவர் புருஷோத்தமனும் தாக்கப்பட்டார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து சென்றது.
இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.