கொட்டும் மழையில் நடந்த பிரமாண்ட மனித சங்கிலி
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டித்து இன்று மாலை 3 மணியளவில் சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை நகரில் திமுகவினரும், பல்வேறு கூட்டணிக் கட்சிகள், தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர்.
மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், வானம் இருண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் கன மழையைப் பொருட்படுத்தாமல் பல்லாயிரணக்கானோர் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு திரண்டு மழையையே அதிர வைத்தனர்.
இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ள சிங்காரவேலர் மாளிகை அருகே முதல்வர் கருணாநிதி பிரமாண்டமான மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பல்லாயிரணக்கானோர் மனித சங்கிலிகளாக அணிவகுத்து நிற்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதியிலும் நிற்க வேண்டியவர்கள் பட்டியலை ஏற்கனவே திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப மனித சங்கிலியில் அனைவரும் பங்கேற்றனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது. கருணாநிதி கார் மூலம் மனித சங்கிலி நடைபெறும் இடங்களை சென்று பார்வையிட்டார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வக்கீல்களுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்து கொண்டார்.
அண்ணா சிலை முதல் கிண்டி வரை, மாணவர்கள் மற்றும் பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி ஆகியோரும் பங்கேற்றனர்.
கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென் சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மனித சங்கிலி அணிவகுப்புக்கு பல்வேறு கட்சிகளும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அணிவகுப்பிலும் கலந்து கொண்டன.
தயாநிதி மாறன்..
அண்ணா சிலை அருகே முன்னாள் மத்திய அமைச்சர் தயாநித மாறன் கொட்டும் மழையில் மனித சங்கிலியில் கலந்து கொண்டார்.
மனித சங்கிலியை தொடங்கி வைத்து காரில் இருந்தபடி பார்வையிட்ட முதல்வர் கருணாநிதி, தயாநிதி மாறன் இருந்த இடம் வந்தபோது காரை நிறுத்தி, அவருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தேனாம்பேட்டையில் ராமதாஸ்..
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேனாம்பேட்டை பகுதியில், மனித சங்கிலியில் கலந்து கொண்டார். அவருடன் பெரும்திரளான பாமகவினர் கலந்து கொண்டனர்.
கிண்டியில் தயாளு அம்மாள்..
முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி உள்ளிட்ட முதல்வரின் குடும்பத்தினர் கிண்டி ஹால்டா பகுதியில் கொட்டும் மழையில் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் இந்த மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.
பலத்த மழை பெய்த போதிலும் அதை சற்றும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் திரண்டு நின்று அமைத்த இந்த மனித சங்கிலி சென்னை முதல் செங்கல்பட்டு வரை சுமார் 60 கி.மீ. தூரம் நீண்டிருந்தது.