கருணாநிதியை கைது செய்து, ஆட்சியைக் கலையுங்கள்!- ஜெயலலிதா

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற திரைப்படத் துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு விரோதமான கருத்துக்களைத் தெரிவித்த இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், ராம.நாராயணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்ற தேச விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கைது செய்திருப்பேன் என்றும் நான் வெளியிட்ட அறிக்கை முதல்வர் கருணாநிதியை வெகுவாக தாக்கியிருக்கிறது.
அதனால்தான் திடீர் நடவடிக்கை எடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவைத் தலைவர் கண்ணப்பனை கைது செய்திருக்கிறார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது.
முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் விஷயத்தில் நாடகம் ஆடுகிறார். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும், பேசத் தூண்டும் பாரதிராஜாவையும் சீமானையும் அமீரையும் கைது செய்யாமல், வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்திருப்பதன் உள்நோக்கம் என்ன?.
அதேபோல, 25.1.2008 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களைப் பகிரங்கமாக தெரிவித்த திருமாவளவன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? விடுதலைப் புலிகளுக்கான ஆயுதப் பொருட்களை கடத்திய வன்னிய அரசு மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
திரைக் கலைஞர்களை ஒன்று திரட்டி ராமேஸ்வரத்துக்குக் கூட்டிப்போய் தேச விரோத பேச்சுக்களைப பேசத் தூண்டிய ராமநாராயணன் மீது என்ன நடவடிக்கை?.
இதிலிருந்தே தெரியவில்லையா, கருணாநிதியின் போலி தேசப் பற்று?.
இப்போது மத்திய அரசு உடனடியாக கைது செய்யவேண்டியது கருணாநிதியைத்தான். அவரைக் கைது செய்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்த அரசையும் கலைக்க வேண்டும்.
வைகோவைக் கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கல் என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்.
அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களுக்கு ஒரு சட்டமும், ஆதரிப்பவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, தேசப் பற்றின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்பது தற்போதைய செயல்பாடுகளிலிருந்து தெளிவாகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications