வைகோ கைது: கடமையைச் செய்துள்ளார் முதல்வர் - தங்கபாலு
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவைத் தலைவர் கண்ணப்பனைக் கைது செய்துள்ளதன் மூலம் தனது கடமையைச் செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு வரவேற்கிறது என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது குறித்து தங்கபாலு அறிக்கை மூலம் வரவேற்றுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்து தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை பகிரங்கமாக ஆதரித்தும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தனித் தமிழ்நாடு வேண்டும் என்று பேசியும் தேச விரோத குற்றம் இழைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று அதை செயல்படுத்தியதன் மூலம் தமிழக முதல்வர் தனது கடமையை நிறைவேற்றியுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும், நிலைப்படுத்துகிற இந்த செயல்பாட்டினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முழு மனதோடு வரவேற்கிறது.
இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் வன்முறை, தீவிரவாதம், நாட்டுப் பிரிவினைக்கு இடமில்லை. அதற்கு எதிராக செயல்படுவோர் தேச விரோத குற்றமிழைத்தவர்கள் ஆவார்கள்.
இதே குற்றங்களை தொடர்ந்து செய்பவர்கள் மற்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களின் பட்டியல் தமிழக அரசின் கையில் உள்ளது. அவர்களையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் மாட்சியை நிலை நிறுத்த வேண்டும்என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய தலைவர்களை படுகொலை செய்த தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாக பேசிய சீமான், அமீர் போன்றவர்களையும் மற்றும் தேச விரோத சக்திகளை ஆதரிப்பவர் எவராயினும் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் வழியில் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ மற்றும் கண்ணப்பன் ஆகியோரை கைது செய்த நிகழ்வினை கேட்டறிந்தவுடன் முதல்வர் கருணாநிதி டெல்லியில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றியும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications