For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ- விஜய்காந்த் மீது வீரபாண்டி தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சி காலங்களில் அமல்படுத்தப்பட்ட மின்வெட்டுகளை மூடி மறைத்து விட்டு, தற்போது மின்தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை அரசியலாக்கும் சில அரசியல் கட்சிகள் முயற்சிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இயற்கை காரணமாகவும், காற்றாலை மின்சாரம் கிடைக்காததாலும், 1,900 மெகாவாட் மின்சாரம் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. 1982ல் அதிமுக ஆட்சியின்போது உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு 100 சதவீத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதைப்போலவே 1983ல் 60 சதவீத மின்வெட்டும், 1985ல் 50 சதவீத மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மின்வெட்டு 1992 வரை இருந்தது.

இதையெல்லாம் மூடி மறைத்து விட்டு, மின்தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை அரசியலாக்க சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதுவும் மின்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுவது மட்டுமல்லாமல் அவரது செயல்பாட்டில் குறைபாடு இல்லாவிட்டாலும், செயல்படாத அமைச்சர் என்ற போலித் தோற்றத்தை உருவாக்க சில அரசியல் கத்துகுட்டிகள் முனைவது வேடிக்கையாக உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மின் உற்பத்திக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தாத நிலையில், நாளுக்கு நாள் மின் உபயோகம் அதிகரித்து மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் மின்வெட்டு செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகளையும், வீடுகளையும் பாதிக்காத அளவுக்கு, கிடைக்கும் மின்சாரத்தை பகிர்ந்தளிக்கவே, மின்சார வினியோக கட்டுப்பாட்டு முறை அறிவிக்கப்பட்டது.

இதை சரியாக புரிந்து கொள்ளாமல் அறிக்கை விட்டிருப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, எண்ணூர், செய்யூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய மின் உற்பத்திக்கான நிலையங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணுமின் உற்பத்தி நிலைய மூன்றாவது உலைகலன் மூலம் கூடுதல் மின்சாரம் டிசம்பர் மாதத்துக்குள் பெற மின்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதையெல்லாம் கொடைநாட்டு அரசி அறிய முயற்சி எடுக்கவில்லை.

கொடை எஸ்டேட்டில் 4 மாத காலம் ஓய்வெடுத்துக் கொண்டு அங்கிருந்தபடியே அறிக்கை விட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதா, சென்னைக்கு வந்த பிறகாவது விவரங்களை அறிந்து, பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதைச் சொல்லி அறிக்கை விட்டிருந்தால், பாராட்டி இருக்கலாம்.

அதற்கு மாறாக இடைக்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டதைக் காரணம் காட்டி அரசியல் லாபம் தேடலாம் என கருதி அறிக்கைப் போர் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

அதைப்போலவே கனவுலகத்தில் அரசியலில் நுழைந்துள்ள ஒருவர், திமுக அரசின் மீதும் விவரங்கள் புரியாமல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்.

இவர்கள்தான், இப்படி என்றால் தினசரி நாளேடு ஒன்றில், 50 சதவீத கட்டண உயர்வு யூனிட் ஒன்றுக்கு என்று செய்தி வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இத்தகைய செய்தியை வெளியிட்டதன் மூலம் இந்த பத்திரிக்கை நிறுவனம் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலையானது அல்ல, உண்மையும் அல்ல. 50 சதவீத மின்கட்டண உயர்வு ஒரு யூனிட்டுக்கு என வெளியிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X