புதுச்சேரி- அந்தமானுக்கு என்ஐடி!
புதுச்சேரி: புதுச்சேரிக்கும், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் சேர்த்து புதுச்சேரியில், புதிய தேசிய தொழில்நுட்பக் கழகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என புதுச்சேரி பாமக தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், இந்த என்.ஐ.டிக்காக புதுச்சேரி நிர்வாகம் பணம் எதையும் செலவிடத் தேவையில்லை. 300 ஏக்கர் நிலம் மட்டும் தந்தால் போதும்.
விரைவில் புதுச்சேரிக்கு இடத் தேர்வுக் குழு வருகை தரவுள்ளது. இந்த என்.ஐ.டி.யை புதுச்சேரி அல்லது காரைக்காலில் அமைப்பது குறித்து அது ஆராயும்.
புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் இந்த ஆணையம்தான் புதுச்சேரிக்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தைப் பெற்று யூனியன் பிரதேசம் முழுமைக்கும் வினியோகிக்கும் என்றார் ராமதாஸ்.