பிரதமரின் செளதி-கத்தார் பயணம் ரத்து: யுஎஸ் போகிறார்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் சவூதி அரேபியா மற்றும் கத்தார் பயணம் ரத்து செய்யப்படவுள்ளது. அதற்குப்பதிலாக அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி -20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் அமெரிக்கா செல்லவுள்ளார்.
நவம்பர் 8ம் தேதி முதல் ரியாத் மற்றும் கத்தாரில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார் பிரதமர். தற்போது அந்தப் பயணம் ரத்தாகியுள்ளது. அதற்குப் பதிலாக நவம்பர் 15ம் தேதி வாஷிங்டனில் நடைபெறவுள்ள ஜி -20 மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சாத், நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. மாநாட்டுக்குப் போகவுள்ளதால், பிரதமரின் பயணத்தை முன் கூட்டியே மேற்கொள்ள முடியுமா என்று சவூதி அரசு கேட்டிருந்தது. ஆனால் பயணத்தை மாற்றியமைக்க விரும்பாத இந்திய அரசு தற்போது பிரதமரின் சவூதி பயணத்தையே ரத்து செய்ய முடிவுசெய்து விட்டது.
அதற்குப் பதிலாக வாஷிங்டனில் நவம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ள ஜி - 20 மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார் எனத் தெரிகிறது. அப்போது அவர் அதிபர் புஷ்ஷையும்அவர் சந்திப்பார் எனத் தெரிகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் புஷ்ஷை அவர் சந்திக்கவிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
உலக பொருளாதார நெருக்கடி குறித்து ஜி -20 மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.