கிளிநொச்சி மருத்துவமனை மீது குண்டு வீச்சு- நோயாளிகள் ஓட்டம்
கொழும்பு: கிளிநொச்சியைப் பிடிக்க தீவிரமாக உள்ள ராணுவம், அங்கு சரமாரித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள அரசு பொது மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் ராக்கெட் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் பீதியடைந்து வெளியேறினர்.
கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிரவாத் தாக்குதலில் இறங்கியுள்ளது. இதில் இரு தரப்புக்கும் இடையில் சிக்கிக் கொண்டு அப்பாவித் தமிழர்கள் 2 லட்சம் பேர் பரிதவித்து வருகின்றனர். பல அப்பாவித் தமிழர்களும் இந்த சண்டையில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
கிளிநொச்சிைய நெருங்கிக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவம், புலிகள் வசம் இருந்தசில முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், மன்னியங்குளம் அருகே 4 கிலோமீட்டர் அளவிலான பகுதியை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அங்கு விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
அக்கராயன் குளம் ஏரிக்கரையின் கிழக்கு பகுதியில் இருந்து மன்னியங்குளம், தெருமுருக்கண்டை சாலை ஆகிய பகுதிகளுக்கு வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராணுவத் துருப்புகள் முன்னேறி இருப்பதாகவும், அப்பகுதியில் பதுங்கி இருக்கும் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
மருத்துவமனை மீது குண்டு வீச்சு:
இந்த நிலையில், கிளிநொக்கியில் உள்ள பொது மருத்துவமனை மீது சிங்கள ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. ராக்கெட் தாக்குதல் மற்றும் குண்டு வீச்சில் அந்த மருத்துவமனை இடிந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதேபோல, அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்துக்கும், விடு தலைப்புலிகளுக்கும் கடும் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 75 நாட்களாக இங்கு நடைபெற்று போரில் சிங்கள படையினர் 65 பேர் கொல்லப்பட்டனர். 98 பேர் காயம் அடைந்தனர் என்று விடுதலைப்புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.