பட்டாசு வேண்டாம்-தா.பாண்டியன், புத்தாடை தவிர்ப்போம்-திருமா
சென்னை: ஈழத்தில் தமிழர்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். தமிழர்கள் பகுதிகள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. அது நிற்கும் வரை தீபாவளியை கொண்டாட வேண்டாம், பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ் மக்களுடைய ஒருமித்த குரலை அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் சேர்ந்து வலியுறுத்த வேண்டும்.
கலைத்துறையைப் பொறுத்தவரையில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது இயல்பு. இதை அரசியல் கருத்தாகவோ, முழக்கமாகவோ கருதக் கூடாது. எனவே அவர்கள் பிரச்சினையில் அனுதாபத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.
இலங்கையில் குண்டுகள் போடுவது நிறுத்தப்படாமல் இருக்கும் இந்த நிலையில், தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டாம் என்று பொதுமக்களை குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி பல போராட்டங்கள் நடந்தபோதும், மத்திய அரசு வெளிப்படுத்தும் கருத்துக்கள் எந்த மன நிறைவையும் தரவில்லை.
இலங்கைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களையோ அல்லது எம்.பிக்களையோ அனுப்ப வேண்டும் என்றார் அவர்.
புத்தாடை தவிர்ப்போம் - திருமா.
இதேபோல தீபாவளிக்கு புத்தாடை அணிவதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் தவிர்ப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோரும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருப்பது கருத்துரிமையை பறிக்கும் அரச வன்கொடுமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.
கைது செய்யப்பட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சிங்களப் படையினரின் குண்டு வீச்சில் மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் சொந்தங்களின் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் பட்டாசு கொளுத்தாமல், புத்தாடை உடுத்தாமல் தீபாவளியை தவிர்த்திட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.