திருமா-ராம நாராயணனை கைது செய்ய ஜெ கோரிக்கை
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் ராம. நாராயணன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வைகோ மற்றும் அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகு திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர், ராம. நாராயணன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை கைது செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று நான் வினவியவுடன் திரைப்பட இயக்குநர்கள் அமீர், சீமான் ஆகியோர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
25-1-2008ம் தேதி நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான தேச விரோத கருத்துகளை பகிரங்கமாகத் தெரிவித்த திருமாவளவன் கைது செய்யப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.
மேலும் 23.10.2008ம் தேதி ரயில் மறியல் போராட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தின் போது கூட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆயுதப் பொருட்களை கடத்திய வன்னிய அரசு உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஏன் இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?
திரைப்படத் துறையில் திமுகவின் பிரதிநிதியாக உள்ள இயக்குனர் ராம. நாராயணன் தான் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கான அடிப்படை வேலைகளை செய்தவர். எனவே, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், அக்கட்சியைச் சார்ந்த வன்னிய அரசு, திமுகவைச் சேர்ந்த ராம. நாராயணன் ஆகியோர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசின் காவல் துறையை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
சீமான்-அமீர் ஜாமீன் மனு தள்ளுபடி:
இதற்கிடையே, சென்னையில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படும் முன் அமீரும், சீமானும் ராமநாதபுரம் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிபதி தங்கவேல் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களை நவம்பர் 7ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சீமான், அமீர் சார்பில் அவர்களது வக்கீல்களும், 30க்கும் மேற்பட்ட வக்கீல்களும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
ஆனால் சீமான், அமீர் மீது சுமத்தப்பட்டுள்ள பிரிவுகளின்படி இவர்களுக்கு ஜாமீன் அளிக்கும் அதிகாரம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இல்லை. செஷன்ஸ் நீதிமன்றத்திற்குத்தான் அது உள்ளது என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி.
இதையடுத்து சீமானும், அமீரும் வருமான வரி செலுத்துபவர்கள் என்பதால் இருவருக்கும் சிறையில் முதல் வகுப்பு அளிக்க வேண்டும், மருத்து உதவிகள் தரப்பட வேண்டும் என்று அவர்களது வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். அதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். பிறகு அதற்குரிய ஆதாரங்களைக் கேட்டார்.












Click it and Unblock the Notifications