முதலில் தாக்குதலை நிறுத்த வேண்டும்-இலங்கை தமிழ் எம்பிக்கள்
திருநெல்வேலி: இலங்கையில் ராணுவத் தாக்குதலை நிறுத்துவது தான் முதல் தேவை என யாழ்ப்பாண எம்பிக்களான ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களான இவர்கள்
நெல்லையில் தமிழர் உரிமைகள் பாதுகாப்பு வழக்கறிஞர்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த 'தமிழ் ஈழ பிரச்னைக்கு தீர்வு என்ன?' என்ற கருத்தரங்கில் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் அவர்கள் பேசுகையில்,
இலங்கை ராணுவம் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி பொதுமக்கள் மீது தான் குண்டு வீச்சு தாக்குதலை நடத்துகிறது. ராஜபக்சே ஆட்சி ஏற்பட்ட பிறகு 30 மாதங்களில் 3,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போரினால் இரண்டரை லட்சம் தமிழர்கள் வீடு இழந்துள்ளனர்.
இதுவரை 22,000 இளைஞர்கள் புலிகள் இயக்கத்திற்காக போரில் இறந்துள்ளனர்.
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கங்கள் மூலமாகவே வினியோகிக்க வேண்டும். இதையெல்லாம் விட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்ய வேண்டிய உடனடி கடமை, ராணுவ தாக்குதல் நிறுத்துவது தான்.
அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியா, நார்வே பங்கேற்க வேண்டும்.
தமிழர்கள் எதிர்பார்ப்பது தங்களை தாங்களே ஆட்சி செய்து கொள்ளும் சுயநிர்ணய உரிமை கொண்ட ஆட்சிமுறையாகும். ராஜபக்சேயின் சொந்த ஊரான அம்பாந்தோட்டையில், 5,000 கோடி ரூபாய் செலவில் புதிய துறைமுகத்தை சீனா அமைத்து வருகிறது. இங்கிருந்து இந்தியாவை சீனாவால் கண்காணிக்க முடியும்.
அதேபோல எண்ணெய்க் கிணறுகளை அமைக்கவும் சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்தியாவிற்கு அச்சுறுத்தலான விஷயங்கள் என்றனர்.












Click it and Unblock the Notifications