இலங்கை-நிதி திரட்டுகையில் திமுக செயலர் மரணம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றிய திமுக செயலாளர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி நிரட்டும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய செயலாளராக இருந்தவர் தங்க மனோகரன் (45). இவர் கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள திருவக்கரை அருள்மிகு வக்கிர காளியம்மன் கோயிலில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணியில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தார்.
வழக்கம் போல் இன்றும் இலங்கை தமிழர்களுக்கு நிதி நிரட்டிக் கொண்டிருந்த போது காலை 10.30 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.
ஈழ நிதி: திருச்சி ரூ. 10 லட்சம் வசூல்:
இதற்கிடையே இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு திருச்சி மாவட்டம் இதுவரை ரூ. 10 லட்சம் பணத்தை வசூலித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் செளன்டய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு ரூ. 50, 000 நிதியை அளித்துள்ளார்.
மாநகர மேயர் சாருபாலா தொண்டைமான், எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், ராணி, செளந்தரபாண்டியன் ஆகியோர் தலா ரூ. 25,000 நிதியளித்துள்ளனர்.
மாவட்ட நலக் கமிட்டியின் பொருளாளர் கோவிந்தராஜு ரூ. 1 லட்சம் நிதியளித்துள்ளார்.
சேவை என்கிற தொண்டு நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ள கோவிந்தராஜு அந்த அமைப்பின் சார்பில் ரூ. 25,000 நிதியை அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.