''கட்-அவுட் பாலாபிஷேகம் போதும்.. தமிழர்களுக்கு நிதி திரட்டுங்கள்''
சென்னையில் நடந்த இலங்கைத் தமிழர்களுக்கான உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர்கள் பேசியதாவது:
சிவக்குமார்:
நடிகர் சிவக்குமார் தனது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரின் சார்பில் ரூ.5 லட்சத்தை இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக வழங்கிவிட்டுப் பேசுகையில்,
இலங்கையில் நடக்கும் படுகொலை நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக்கு வழங்கப்படும் ராணுவ, பொருளாதார உதவிகள் நிறுத்தப்பட வேண்டும். உடனடி போர் நிறுத்தம் வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி கொடுத்து முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து 2 நாள், 3 நாள் என பேச்சு நடத்தி இலங்கைப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதுபோல நான் கனவு கண்டேன். அந்த கனவு மெய்ப்பட வேண்டும் என்றார்.
வடிவேலு:
வடிவேலு பேசுகையில், இலங்கையில் கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகும் தமிழ் மக்கள் படும் அல்லல்களை இணைய தளங்கள் வாயிலாக பார்த்தேன். அவர்களின் சோகம் மனதைப் பிசைகிறது. அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு குரல் கொடுத்து அந்த மக்களை காக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.2 லட்சம் வழங்க நாளை முதலமைச்சரிடம் நேரம் கேட்டுள்ளேன். இன்று நடிகர் சங்கத் தலைவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இங்கும் ரூ.50,000 தருகிறேன் என்றார்.
விவேக்:
நடிகர் விவேக் பேசுகையில், இதை உண்ணாவிரதம் என்று கூறுவதைவிட மௌன விரதம் என்று சொல்லியிருக்கலாம். மனதை உள்ள எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாதபோது என்ன பேச்சு வேண்டியிருக்கிறது.
தமிழ் குடி உலகத்தின் மூத்தகுடி. கிரேக்க, ரோமானிய நாகரீகங்களுடன் வைத்து பேசப்படும் நாகரீகத்தை கொண்டது. தமிழன் பல்வேறு மாநிலங்களும், பல்வேறு நாடுகளும் வளர்ச்சியடைய தனது உதிரத்தையும், உழைப்பையும், வியர்வையையும் சிந்தியிருக்கிறான்.
வந்தாரை வாழவைக்கும் தமிழன் எல்லா இடத்திலும் ஏமாற்றப்படுகிறான். காலம் கடந்துதான் குரல் கொடுக்கிறான்.
வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடைபெற ஈழத் தமிழர்கள் தான் காரணம். எங்களது ஒவ்வொரு உணவு பருக்கையிலும் அவர்கள் உள்ளனர். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.
ஜெயராம்:
கேரளத்தைச் சேர்ந்தரவான நடிகர் ஜெயராம் உண்ணாவிரத்தில் பங்கேற்றுப் பேசுகையி்ல், தமிழர்கள் இலங்கையில் நீண்ட காலமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதனை தீர்க்க அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பதில் ஒரு உண்மையான இந்தியன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன் என்றார்.
பார்த்தீபன்:
நடிகர் பார்த்தீபன் பேசுகையில், தமிழர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசினால் ஈழத்தில் ராணுவத் தினர் கூடுதல் தாக்குதல் நடத்துவதாக அறிந்தேன். எனவே நிதானம் தேவை.
ஈழத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். அதை பார்த்தால் மனம் தாங்க முடியவில்லை. இதுபோன்ற பிரச்சனைகளை ஐ.நா. சபை தான் தீர்க்க வேண்டும். ஆனால் அது டீக்கடை பெஞ்ச் போல உள்ளது. 30 வருடமாக ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் இன்னமும் தீரவில்லை. அமெரிக்கா நினைத்தால் இந்த பிரச்சனையை ஒரு நொடியில் தீர்க்கலாம்.
சீமான், அமீர் கைதால் நம் போராட்டம் உத்வேகமடைந்துள்ளது என்றார்.
மணிவண்ணன்:
நடிகர் மணிவண்ணன் பேசுகையில், ஈழத்தில் பள்ளிக்கூடம் மீது கூட சிங்களர்கள் குண்டுகளைப் போடுகிறார்கள். மாணவ-மாணவிகள் பதுங்கு குழிகளில் ஒளிகிறார்கள். அதைப் பார்க்கும்போது நெஞ்சு வலிக்கிறது.
வெடிச் சத்தத்தில் பிறந்து, வெடிச் சத்தத்திலேயே அவர்கள் வாழ்கிறார்கள். அங்கு சமாதானம் ஏற்பட வேண்டும். இனவெறி ஒடுக்கப்பட வேண்டும். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.
லாரன்ஸ்:
நடன இயக்குனரும் நடிகருமான லாரன்ஸ் பேசுகையில், இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ரஜினி, விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் ரசிகர்களும் நிதி திரட்ட வேண்டும். நான் என் பங்குக்கு ரூ. 10 லட்சம் நிதி திரட்டியுள்ளேன்.
என் சொந்த பணத்தில் இருந்து ரூ. 2 லட்சம் கொடுத்து மொத்தம் ரூ. 12 லட்சம் வழங்குகிறேன். ரசிகர்கள் நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை நிறுத்திவிட்டு நிதி தர வேண்டும் என்றார்.













Click it and Unblock the Notifications