ராஜபக்சேவின் மைத்துனர் பாபநாசம் விஜயம்
பாபநாசம்: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தங்கை கணவர் திருக்குமார் நடேசன் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் மலைக்கு வருகை தந்தார். தமிழர்களுக்கு எதிராக அவர் பூஜை செய்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா பக்சே. இவரது கணவர் எம்பி திருக்குமார் நடேசன். நேற்று காலை பாபநாசம் வந்த இவர் அகஸ்தியர் அருவி அருகேயுள்ள அகஸ்தியர் கோயிலில் வழிபட்டார். அதன்பின்னர் அங்குள்ள முருகன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார்.
அவருடன் இலங்கை ழிலாளர் காங்கிரஸ் தலைவர் மணிமுத்து, சிலோன் இன்டர்நேஷனல் வங்கி மேலாளர் ராகவன் உள்பட 25 பேர் வந்திருந்தனர்.
தமிழர்களுக்கு எதிராக பூஜை - யாகம்?
தரிசனத்தை முடித்து விட்டு திருக்குமார் நடேசன் நிருபர்களிடம் கூறியதாவது, நான் கடந்த 20 ஆண்டுகளாக கந்த சஷ்டி விழாவுக்கு திருச்செந்தூருக்கு வந்து செல்கிறேன். அப்படி வரும் போதுதெல்லாம் பாபநாசம் அகஸ்தியர் கோயிலுக்கும் வருவது வழக்கம். அதே நோக்கத்தில்தான் இங்கு வந்துள்ளேன்.
இங்கே நான் யாகம் எதுவும் நடத்தவில்லை. நான் நடத்தியது கந்த சஷ்டி விரதத்துக்கான பூஜை மட்டும்தான்.
நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு எதிராக பூஜைகள் நடத்த வருவதாக சொல்லப்படுவது தவறு. இது மிகுந்த வேதனை அளிக்கின்றது.
தமிழக கடவுளாகிய முருகன் கோயிலில்தான் இந்த பூஜை நடத்துகிறோம். அப்படி இருக்கையில் தமிழர்களுக்கு எதிராக தமிழக கடவுளிடமே வேண்ட முடியுமா... எனக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. கந்த சஷ்டி பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டதால்தான் 14 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு 2 குழந்தைகள் பிறந்தன.
இந்தியா ஒரு ஆன்மீக பூமி. அதனால்தான் நான் இங்கே அடிக்கடி வருகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications