வீடு-வாகன கடன் வட்டி குறைகிறது: டெபாசிட்கள் மீதான வட்டியும் குறையும்
டெல்லி: வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க பொதுத்துறை வங்கிகள் முன் வந்துள்ளன. அதே போல மக்களின் டெபாசிட்கள் மீதான வட்டியும் குறைக்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச பொருளாதார மந்தம், இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை குறித்து நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக இன்று பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சிதம்பரம் சந்தித்து அவர்களது பிரச்சனைகள் குறித்தும், அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.
இந்தக் கூட்டத்தில் சிறு தொழில்களுக்கும் தனி நபர்களுக்கும் கடன்களை வழங்குவதை நிறுத்த வேண்டாம் என்றும், வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்குமாறு சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.
சர்வதேச நிதி சிக்கல்களுக்கு பயந்து கடன்களைத் தராமல் சந்தையில் நிதிப் புழக்கத்தை வங்கிகள் அளவுக்கதிகமாக கட்டுப்படுத்தினால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என சிதம்பரம் கூறினார்.
குறிப்பாக கட்டுமானப் பணிகளுக்கான கடன்களை நிறுத்தினால் அதைத் தொடர்புடைய பிற துறைகளும் பாதிக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் வங்கிகளுக்குத் தேவையான கையிருப்பையும் நிதியையும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வழங்கி வருவதை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களை குறைக்குமாறு சிதம்பரம் வைத்த கோரிக்கையை அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை வரும் திங்கள்கிழமை முதல் குறைக்கும் எனத் தெரிகிறது. அதே போல மற்ற வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைக்கவுள்ளன.
அதே நேரத்தி்ல் வங்கிகளில் உள்ள மக்களின் முதலீடுகள் மீதான வட்டி விகிதத்தையும் குறைத்தால் தான் நஷ்டமில்லாமல் இயங்க முடியும் என வங்கிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் டெபாசிட்கள் மீதான வட்டியும் குறையவுள்ளது.
மேலும் இது தொடர்பாக நிதித்துறைச் செயலாளர், ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோரும் வங்கிகளின் தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications