சட்டசபையில் திமுகவுக்கு நெருக்கடி-காங். திட்டம்!
சென்னை: தமிழக சட்டசபை 10ம் தேதி கூடவுள்ள நிலையில் வரும் 6ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ்- திமுக இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் சட்டசபையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து இதில் முடிவெடுக்கப்படவுள்ளது.
இலங்கை பிரச்சனை, புலிகள் விவகாரத்தில் திமுகவையும் முதல்வரையும் கடுமையாகத் தாக்கி வருகின்றனர் ஞானசேகரன் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.
இந்த பிரச்சனையில் மத்திய அரசுக்கு தந்த நெருக்கடியை திமுக குறைத்துக் கொண்டுவிட்டாலும் கூட திமுக மீதான தாக்குதலை மூத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து வருவதோடு, அதிமுகவையும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் பாராட்டி வருகின்றனர்.
வழக்கமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கூடும் போது அந்றைய தினம் காலையில் தான் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் நெருக்குதலால் 4 நாட்களுக்கு முன்பே கூட்டத்தைக் கூட்டியுள்ளார் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவரான சுதர்சனம்.
மேலிட பொறுப்பாளர்களும் பங்கேற்பு:
இந்த் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக இந்தக் கூட்டங்களில் அவர்கள் கலந்து கொள்வதில்லை.
ஆனால், இதில் தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும், மத்திய அமைச்சருமான வயலார் ரவி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அருண்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் அருண்குமார் தீவிரமான அதிமுக ஆதரவாளராவார்.
இதனால் திமுகவுக்கு நெருக்கடி கொடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக இலங்கை, புலிகள் விவகாரத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் பெரும் சங்கடம் தரலாம்.
மேலும் ஆட்சியில் பங்கு கோருவதோடு, வாரியங்களில் தலைவர் பதவிகளையும் கோரவும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரல் எழுப்பலாம் எனத் தெரிகிறது.
இனியும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதில்லை என்ற நிலையை எடுக்க பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறி வருவதால் இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
6ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications