பசும்பொன்னில் 5 அதிமுகவினருக்கு கத்திக்குத்து-ஜெ
சென்னை: பசும்பொன்னில் அதிமுகவினர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும் தாக்குதலில் காயமடைந்த அதிமுகவினரின் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பசும்பொன்னில் கடந்த 30ம் தேதி தேவர் 101வது ஜெயந்தி விழாவில், ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த 5 அதிமுகவினர், கொலை வெறிக் கும்பலால் கத்தியால் குத்தப்பட்டனர்.
முதுகுளதூர் ஒன்றியம், விக்கிரமபாண்டியபுரத்தைச் சேர்ந்த 9 அதிமுகவினரும் திமுகவினரால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரவிச்சந்திரன், கருப்பையா, வேலு, கந்தன் மற்றும் பாலமுருகன் ஆகிய ஐந்து பேரும் மதுரை தனியார் மருத்துவமனையிலும், ஆறுமுகம், முனியாண்டி, கருப்பையா, கண்ணன் ஆகிய நான்கு பேர் கமுதி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் எவ்வித பாரபட்சமும் இன்றி, மேற்படி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ஆட்சி பொறுப்பேற்ற 29 மாத காலத்தில், திமுகவினரின் கொலை வெறி தாக்குதல்கள், அராஜகங்கள் மற்றும் மக்கள் விரோதச் செயல்கள் தான் அதிகளவில் அரங்கேறி வருகின்றன.
போலீஸ் துறையினர் எவ்வித பாரபட்சமும் கருதாமல், மேற்படி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலும் மருத்துவ சிகிச்சைக்காக, பலத்த காயமடைந்த 5 பேருக்கு தலா 15,000 ரூபாயும், லேசான காயமடைந்த 4 பேருக்கு 6,000 ரூபாயும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications