ஜெ. பாதுகாப்பு-தனி சட்டம் கோரும் அதிமுக
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக தனிச் சட்டமே இயற்ற வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடினார்.
ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பாக நடந்து வரும் இந்த வழக்கில், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஜி.மாசிலாமணி ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு மறு ஆய்வு குழு எடுத்த முடிவு பற்றியும், பசும்பொன் கிராமத்தில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்தும் கோர்ட்டில் விரிவான அறிக்கையை சீல்' வைத்த கவரில் அளித்துள்ளேன்.
ஜெயலலிதாவுக்கு அரசு முழு பாதுகாப்பு அளித்து வருகிறது. கடந்த 30ம் தேதி பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்த ஜெயலலிதாவுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்தார்.
அந்த நேரம் மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜெயலலிதாவும் வந்ததால் அங்கிருந்த கூட்டத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்
ஏற்பட்டது. போலீசார் மீது அவர்கள் கற்கள் வீசினார்கள்.தள்ளு முள்ளும் நடந்தது.
அதற்குள் ஜெயலலிதா பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுவிட்டார். தேவர் சமாதி அருகே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை தவிர, பொது மக்களுக்காக கூடுதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பு பணியிலும், மக்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
ஜெயலலிதா வீட்டில் இருந்து புறப்பட்டு தேவர் சமாதி வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, மீண்டும் வீட்டுக்கு செல்லும்வரை ஹெலிகாப்டர் தளம், விமான நிலையம், போகும் வழி என அனைத்து இடங்களிலும் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றார்.
ஜெயலலிதாவின் சார்பில் அதிமுக வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் வாதாடுகையில், பசும்பொன் கிராமத்தில் ஜெயலலிதா மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் உதவியுடன் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அவர் அங்கு சென்றிருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். கடவுள் புண்ணியத்தால் அவர் பேராபத்தில் இருந்து உயிர் தப்பினார்.
பசும்பொன் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்று அரசு தரப்பில் கூறுகிறார்கள். அந்த பாதுகாப்பு வளையத்தையும் மீறி, அந்த இடத்தில் விஷமிகளின் கையில் கற்கள், இரும்பு கம்பிகள்
எப்படி வந்தன என்று தெரியவில்லை.
பாதுகாப்பு என்பது பேப்பரில் இருந்தால் மட்டும் போதாது.ஜெயலலிதாவுக்கு அரசு முழு பாதுகாப்பு அளிக்க
விரும்பவில்லை. ஜெயலலிதா மீதான தாக்குதல் சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சியினரும் கண்டித்துள்ளனர்.
தீவிரவாதத்தை ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வருவதால், அவரது உயிருக்கு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் உள்ளது. எனவே, தேவைப்பட்டால் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தனி சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, நிறைய பேருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ராமகோபாலன், சுப்பிரமணியம் சுவாமி ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்படும் இசட் பிளஸ்' பாதுகாப்புக்கு இணையாக, ஜெயலலிதாவுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பாதுகாப்பு தேவையென்றால் அரசிடம் முறையிடலாம். அதுபற்றி பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது என்றார்.
இரு தரப்பு வாதங்களையம் கேட்ட நீதிபதி, ஒரு இடத்தில் எந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதை அரசு தான் முடிவு செய்யவேண்டும். அது போதுமானதா, இல்லையா? என்று நீதிமன்றம் எப்படி மதிப்பிட முடியும்?. அதை எப்படி கண்காணிக்க முடியும்?.
உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுபடி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு பற்றி அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை நான் பார்க்கிறேன்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக அரசு அளித்துள்ள பாதுகாப்பு மறு ஆய்வு குழுவின் அறிக்கை மற்றும் பசும்பொன் கிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பான அறிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தபிறகு, தேவைப்பட்டால் இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications