ஜெ போராட்டம்: பஸ் டிக்கெட் இனி தமிழிலும்!
சென்னை: சென்னை அரசுப் பேருந்துகளில் தமிழிலும் டிக்கெட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார், அதிமுக இன்று போராட்டமும் நடத்தியதன் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிய சாப்டவேர் கிடைக்காத காரணத்தால்தான் சென்னை நகரப் பேருந்துகளில் ஆங்கிலத்தில் டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழில் டிக்கெட் வழங்க வேண்டும் என்று கோரி அதிமுக நடத்தியுள்ள போராட்டம், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
சென்னை நகரில் இயக்கப்படும் 2,900 மாநகர பேருந்துகளில் 800 பேருந்துகளில் இ- டிக்கெட் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. நடத்துனர்களின் வேலையைக் குறைத்து, பயணிகளுக்கு விரைவாக டிக்கெட் தர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழில் டிக்கெட் தரக் கூடிய சாப்ட்வேர் கிடைக்கவி்ல்லை. எனவேதான் ஆங்கிலத்தில் டிக்கெட் தர வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.
தமிழில் டிக்கெட் தர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது தேவையான தமிழ் சாப்ட்வேரை போக்குவரத்துக் கழகம் வாங்கியுள்ளது. இந்த சாப்ட்வேரைப் பயன்படுத்தி 800 இ-டிக்கெட் இயந்திரங்களிலும் தமிழிலும் இனிமேல் டிக்கெட்கள் வழங்கப்படும்.
இன்னும் இரண்டு வாரங்களில் இது அனைத்துப் பேருந்துகளுக்கும் படிப்படியாக விஸ்தரிக்கப்படும்.
தமிழில் டிக்கெட் தர தேவையான சாப்ட்வேரை வாங்கும் முயற்சியில் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டுள்ளது என்பதை அறிந்தும் கூட போராட்டத்திற்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையாகும்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அழிவுப்பாதையில் இருந்தது. 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், போக்குவரத்துத்துறைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.
திமுக அரசுக்கு இதன் மூலம் மக்களிடையே நல்ல பெயர் கிடைத்துள்ளது. இதை பொறுக்க முடியாமல் மக்களைக் குழப்பும் வகையில் போராட்டத்தை நடத்தி வருகிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நேரு.












Click it and Unblock the Notifications