தேனி நிலத்தை ஆக்கிரமித்து வசூல் செய்யும் கேரளா
தேனி: தேனி மாவட்டத்தில் தமிழக நிலத்தை கேரள மாநில சுற்றுலாத்துறை ஆக்கிரமித்து அங்கு வருவோரிடம் சுற்றுலாக் கட்டணம் வசூல் செய்ய ஆரம்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மிழகம், கேரளா இடையே நதி நீர்ப் பிரச்சினைகள் உள்ள நிலையில் புதிதாக ஒரு பிரச்சினை பட்டியலில் சேர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதியில் ராமன்கல் மெட்டு என்ற இடம் உள்ளது. இந்த இடத்தை கேரள மாநில சுற்றுலாத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.
அங்கு 50 அடியில், ஆதிவாசிகள் சிலை ஒன்றை (கையில் குழந்தையுடன் ஆதிவாசி தம்பதி இருப்பதைப் போல) நிறுவியுள்ள கேரள சுற்றுலாத்துறை, அந்த இடத்தை சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது. மேலும், அங்கு வருவோரிடம் கட்டணமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது, தமிழக எல்லைக்குள் உள்ள பகுதி என்று கூறுகிறார் முன்னாள் கோம்பை ஜமீன்தார் அப்பாஜி ராஜ்குமார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கேரள அரசு ஆக்கிரமித்துள்ள இடம் தமிழகத்திற்குச் சொந்தமானது. இது கோம்பை ஜமீனுக்கு உட்பட்ட பகுதியாக முன்பு இருந்தது. இதுதொடர்பான தாமிரப்பட்டய ஆதாரம் எங்களிடம் உள்ளது.
நமது பகுதியை கேரள சுற்றுலாத்துறை ஆக்கிரமித்துள்ள நிலையில், இதை எப்படி தமிழக அரசு அனுமதித்தது என்று புரியவில்லை.
ஆக்கிரமித்ததோடு இல்லாமல், அங்கு சிலையையும் நிறுவி, வருவாயும் ஈட்டி வருகிறது கேரள சுற்றுலாத்துறை என்று கூறினார்.
இதுகுறித்து தமிழக அரசின் வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கேரளா 3 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு சிலை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது. அப்போதே தமிழக அரசு அதற்கு ஆட்சேபனை தெரிவித்தது.
சிலை அமைக்கப்பட்டுள்ள இடம் கோம்பையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அது தமிழகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.
அந்த சமயத்தில் தமிழக அரசிடம் போதிய ஆய்வு ஆவணங்கள் கையில் இல்லாமல் இருந்தது. தற்போது அனைத்து ஆவணங்களும் உள்ளன. எனவே தமிழகத்தின் ஆட்சேபனையை கேரள அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.
ராமன் கல் மெட்டு பகுதியை மிகவும் புனிதமான இடமாக இந்துக்கள் கருதுகிறார்கள். சீதையைக் காப்பாற்ற நடந்த சண்டையில் ஜடாயு ராவணனால் கொல்லப்பட்ட பின்னர் இந்த ராமன் கல் மெட்டு பகுதியில்தான், ஜடாயுவுக்கு ராமர் இறுதிச் சடங்குகளை செய்தாராம்.
இப்படி ராமாயாண காலத்துடன் சம்பந்தப்பட்ட பகுதியை கேரள அரசு ஆக்கிரமித்துக் கொண்டு அங்கு சிலையை நிறுவி வசூலிலும் இறங்கியிருப்பது தேனி மாவட்ட மக்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு இந்த புனிதமான இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தேனியில் கோரிக்கை வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications