நாடாளுமன்றத்திற்கு ஏப்ரலில் தேர்தல்-காங். திட்டம்

லோக்சபாவுக்கு தேர்தல் வரப் போகிறது என்று பல மாதங்களாகவே பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் எப்போது தேர்தல் வரும் என்பதில் உறுதியான தகவல் இல்லை.
இந் நிலையில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தலாம் என சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்து தெரிவித்துள்ளாராம்.
இந்தக் கருத்துக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தலாமா என கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர்கள் கூடி விவாதித்தனர். ஆனால், இதற்கு திமுக, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி ஆகியவை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் திடீரென குறுக்கிட்டு விட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் தேர்தலை தள்ளிப் போட காங்கிரசும் தீர்மானித்தது.
இப்போது ஏப்ரல் மாதம் உகந்ததாக இருக்கும் என்ற கருத்துக்கு காங்கிரஸ் வந்துள்ளது. இதற்கு முதல்வர் கருணாநிதி, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.
விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் தொடங்கியுள்ள வேலையிழப்பு உள்ளிட்டவை தங்களுக்கு பாதகமாக அமைந்து விடுமோ என்ற கவலையும் காங்கிரஸ் கூட்டணியை ஆட்டி வருகிறது.
தேர்தலுக்குப் பின்னர் தங்களது கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குமோ தெரியாது என்பதால் முடிந்தவரை ஆட்சியில் நீடிக்க வேண்டும் என கூட்டணிக் கட்சித் தலைவர்களில் பலர் கருதுவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications