நானும் ஓபாமா மாதிரி வெல்வேன்: சிரஞ்சீவி

பிரஜா ராஜ்ஜியம் கட்சியை ஆரம்பித்துள்ள சிரஞ்சீவி, அர்ப்பணிப்பு யாத்திரை என்ற பெயரில் ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 8 நாட்களாக தெலுங்கானா பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
பத்ராச்சலத்தில் தனது சுற்றுப்பயணத்தை நேற்று அவர் முடித்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அமெரிக்க மக்கள் மாற்றத்தை விரும்பினர். இதை வலியுறுத்தித்தான் அங்கு பாரக் ஓபாமா பிரசாரம் மேற்கொண்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
அதேபோல ஆந்திர மக்களும் இப்போது மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். ஓபாமா அமெரிக்காவில் வென்றதைப் போல நானும் ஆந்திராவில் வெற்றி பெறுவேன்.
எனக்கு வாய்ப்பு தாருங்கள். ஊழலற்ற ஆட்சியை நான் அமைப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என்றார் சிரஞ்சீவி.
வழக்கம் போல இந்தக் கூட்டத்திற்கும் மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியிருந்தது.
முட்டை வழங்கி பதிலடி:
இதற்கிடையே, சிரஞ்சீவி கட்சியினர் நூதனப் போராட்டம் ஒன்றில் இறங்கியுள்ளனர்.
சமீபத்தில் நரசம்பேட் என்ற இடத்தில் பொதுக் கூட்டத்தில் சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசியபோது, அவர் மீது, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர், முட்டைகளை வீசினர். இதில், சில முட்டைகள் சிரஞ்சீவியின் தலையில் விழுந்து உடைந்தன.
இதனால், சிரஞ்சீவி கட்சியினர் கோபம் அடைந்தனர். அவர்களை கட்டுப்படுத்திய சிரஞ்சீவி, இதை எதிர்த்து அகிம்சை வழியில் போராடும்படி தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் வர்த்தக பகுதிகளில் பொதுமக்களுக்கு அக்கட்சியினர் இலவசமாக முட்டைகளை வழங்கி வருகின்றனர், அக்கட்சியினர்.
இந்த புதுமையான போராட்டம் ஆந்திராவில் வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications